சேற்றில் சிக்கி பலியான ஆதிவாசி வாலிபர்... குளிக்கப்போனபோது பரிதாபம்...

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கோழிக்கண்டி பகுதியில் பழங்குடியின இளைஞர் குளிக்க சென்ற இடத்தில் தடுப்பணையில் உள்ள சேற்றில் சிக்கி பலி.

சேற்றில் சிக்கி பலியான ஆதிவாசி வாலிபர்... குளிக்கப்போனபோது பரிதாபம்...

கூடலூர் அருகே உள்ள ஸ்ரீமதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட கோழிக்கண்டி பகுதியில் பழங்குடியின இளைஞரான மணி என்பவர் தனது நண்பர் முரளி மற்றும் நண்பர்களுடன் விடுமுறை என்பதால் அருகேயுள்ள தடுப்பணையில் குளிக்க சென்றுள்ளார்.

அப்போது திடீரென மணி தண்ணீரில் மூழ்கி சிறிது நேரம் தண்ணீரில் இருந்து வெளியே வராததால் உடனே அவரின் நண்பர்கள் சத்தம் போட்டு அழைத்துள்ளனர்.

அப்போது எந்த அசைவும் இல்லாததால் உடனே ஊர் மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே கூடலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின் மணியை இறந்த நிலையில் மீட்டனர். பின்பு மணியின் உடலை கூடலூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.