கோவை, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்..!

தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த 3-ந்தேதி தொடங்கிய நிலையில், தற்போது கர்நாடகா பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்கிறது.  

அதன் தொடர்ச்சியாக தென்மேற்கு பருவகாற்று காரணமாக, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மற்ற மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இன்று பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

அதனைத்தொடர்ந்து, நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.