முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன?

முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன?

குடிமராமத்து பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது குடிமராமத்து பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 500 கோடி ரூபாயில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், "கடந்த அதிமுக ஆட்சியின் போது 2019ல் தமிழ்நாடு முழுவதும் குடிமராமத்து பணி செய்ய ரூ.500 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டது. இதில், நீர்நிலைகளை தூர்வாருவதல் மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டது. 

இதையும் படிக்க : சொத்துப்பட்டியலுக்கு யாரும் இதுவரை மறுப்பு தெரிவிக்க வில்லை - அண்ணாமலை பேட்டி!

ஆனால், பல இடங்களில் விதிகளின் படி பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தரமில்லாத வகையில் பணிகளை மேற்கொண்டு, மக்கள் வரிப்பணத்தை வீணடித்துள்ளனர். குறிப்பாக, நெல்லை மாவட்டத்திலுள்ள பிரான்சேரிகுளம், சுப்ரமணியபுரம் கீதாகுளம் உள்ளிட்ட 14 குளங்களில் பெயரளவில் பணிகள் நடந்துள்ளன. தரமான ஷட்டர்கள் அமைக்கவில்லை. தரமற்ற கான்கிரீட் போடப்பட்டுள்ளது. 14 குளங்களில் மோசடியாகவே பணிகள் நடந்துள்ளன. குடிமராமத்து பணிகள் மேற்கொள்வதற்கான அரசாணை மற்றும் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றவில்லை. 

எனவே, குடிமராமத்து பணிகள் நடந்த சம்பந்தப்பட்ட குளங்களில் முறையாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு கான்கிரீட் மற்றும் ஷட்டர்களை பலப்படுத்தவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த வழக்கு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைப்பாறு நீர்வள ஆதார அமைப்பின் தலைமை பொறியாளர் மற்றும் தாமிரபரணி பாசன கோட்ட செயற்பொறியாளர்கள் உள்ளிட்டோர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.