தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்? சட்டப்பேரவையில் அதிமுக - திமுக இடையே காரசார விவாதம்!!

நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் திமுக ஆட்சியில் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டது ஏன்?  சட்டப்பேரவையில் அதிமுக - திமுக இடையே காரசார விவாதம்!!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்டது குறித்து திமுக அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

அப்போது, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்த நிறுத்திவைத்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்திவைக்கவில்லை என்றும் ஒப்பந்தப்புள்ளி கோருவதில் காலதாமதம் ஆனதால் தான், தாலிக்கு தங்கம் திட்டத்தை 4 ஆண்டுகளாக செயல்படுத்த முடியவில்லை என விளக்கம் அளித்தார்.

ஒப்பந்தப்புள்ளிக்கு 4 ஆண்டுகளா? அப்படி என்ன ஒப்பந்தப்புள்ளி அது? என அமைச்சர்  துரைமுருகன் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தங்கம் விலை ஏறி, இறங்கியதால் தாலிக்கு தங்கம் திட்டத்தை செயல்படுத்த நிறுவனங்கள் முன்வரவில்லை என்பதே உண்மை என தெரிவித்தார்.

தொடர்ந்து, அதிமுகவின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் கைவிடப்பட்டதற்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், அதிமுக தொடங்கிய திட்டங்களை திமுக நிறுத்துவது போன்ற போலித்தோற்றத்தை உருவாக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சிப்பதாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக திட்டங்களை முடக்கியது அதிமுக அரசு தான் என்றும் கூறினார்.

மேலும், அதிமுக ஆட்சி காலத்தில் கைவிடப்பட்ட திட்டங்களை பட்டியலிட்ட முதலமைச்சர்,  நல்ல திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதை தொடரும் ஆட்சி கருணாநிதி ஆட்சி, திமுக ஆட்சி என திட்டவட்டமாக தெரிவித்தார்.