கடப்பாரையால் மனைவி, மாமியார் அடித்து கொலை... 

மணலூர்பேட்டை அருகே குடும்ப தகராறு காரணமாக மனைவி, மாமியாரை அடித்து கொலை செய்து விட்டு மருமகன் தப்பி ஓட்டம்.

கடப்பாரையால் மனைவி, மாமியார் அடித்து கொலை... 

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் முருக்கம்பாடி. இந்த கிராமத்தில் நேற்று நள்ளிரவு குடும்பத்தகராறு காரணமாக முருகன் என்பவர் தனது மாமியார் சரோஜா மற்றும் மனைவி மகாலட்சுமி ஆகியோரை கடப்பாரையால் தலையில் அடித்துக் கொன்று விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

பின்னர் இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரேதத்தை மீட்டு திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் , சம்பவம் நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார். மேலும் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மணலூர்பேட்டை காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று ஒருவர் வெட்டி கொலை செய்த நிலையில் இன்று மீண்டும் அதே போல் கொலை சம்பவம் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.