” நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு வலு சேர்க்கும் விதமாக அதிமுக தலமை அலுவலகத்தில் மாநாட்டுக்கான பிரச்சார வாகனத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கொடியசைத்து துவங்கி வைத்தார்.
அதிமுகவின் மாநாட்டுக்கான பிரச்சார பாடல் ஒலிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும் மாநாட்டிற்கு 'வீர வரலாற்றின் பொன் விழா எழுச்சி மாநாடு' என பெயரிடப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மாநாடு குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:-
” இதுவரையில் தமிழ்நாடு கண்டதில்லை இந்திய திருநாடு கண்டதில்லை என்கிற வகையில் இந்த மாநாடு மகத்தாக அமையப்போகிறது. ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, குறிப்பாக மதுரையை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
11 மாவட்டங்களில் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒவ்வொரு தொண்டரும் இந்த மாநாட்டிற்கு செல்ல வேண்டும். ஆர்வத்தோடு தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள் மத்தியில் பொதுமக்களும் வரவேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தின் படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு வசதி சுகாதார வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வகையிலும் இந்த கூட்டம் இன்றைக்கு நடைபெற்றது. 40 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கான இட ஒதுக்கீடு செய்வது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது”, என்று தெரிவித்தார்.
ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு தொடர்பான கேள்விக்கு:-
” நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது; எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு அவர் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறார்; உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்”, என பதிலளித்தார்.
அதிமுக பாஜக இடையே அடிக்கடி ஏற்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு:-
” அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு. செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட தொண்டனாக இருந்தாலும், யாராயிருந்தாலும் விமர்சனம் செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலையை அண்ணாமலை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால் அண்ணாமலைக்கு நல்லது எனக் கூறினார்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜிக்கு எதிராக கோ-வாரண்டோ வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு!