"ஆளுநர் மிகவும் நல்ல மனிதர்", சபாநாயகர் அப்பாவு பேச்சு!

"ஆளுநர் மிகவும் நல்ல மனிதர்", சபாநாயகர் அப்பாவு பேச்சு!

நெல்லையில் நடந்த விழா ஒன்றில், அமைச்சரை பதவி நீக்கம் செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை எனவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நான்கரை மணி நேரத்தில் ஆளுநர் உணர்ந்துள்ளார் எனவும் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு விமர்சித்துள்ளார். 

நெல்லை பாளையங்கோட்டையில் ஒரு கல்லூரியில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு பங்கேற்றுள்ளார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் தகுதி ஆளுனருக்கு இல்லை என்பதை ஆளுநர் 4½ மணி நேரத்தில் தெரிந்துகொண்டுள்ளார்.மத்திய உள்துறை அமைச்சர் பதவி நீக்க விவகாரத்தில் தலையிட்டுள்ளது குறித்து எனக்கு தெரியாது.ராமர் கோவில் இடிப்பு சம்பவம் தேச துரோக வழக்காக பார்க்கபட்ட நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய அமைச்சர்களாக இருந்த முரளி மனோகர் ஜோஷி, அத்வானி போன்றோர் பதவியுடன் தான் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறி இறங்கினார்கள் இந்த வழக்கில் அவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலிலும் வைக்கப்பட்டார்கள். அவர்கள் இருவரும் பதவியிலிருந்து கொண்டு தான் இந்த வழக்கை சந்தித்தனர்., என கூறியுள்ளார்.

மேலும், அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் உரிமை ஆளுநருக்கு இல்லை. ஆளுநருக்கு இருக்கும் உரிமைகள் என்ன என்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்ற கட்சியின் தலைவரை பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளுங்கள் என சொல்லும் உரிமை மட்டும்தான் அவருக்கு உள்ளது. யார் யார் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற பட்டியலை ஆளுநருக்கு கொடுத்தால் அதனை ஏற்று பதவிப்பிரமாணம் ஆளுநர் செய்து வைக்க வேண்டும். அமைச்சர்கள் தானாக பதவி விலகலாம் அல்லது முதலமைச்சர் அவர்களை பதவியை விட்டு நீக்கலாம் அமைச்சர் பதவியில் இருந்து ஆளுநர்  நீக்க முடியாது, வேறு யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது, எனவும் பேசியுள்ளார்.

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செய்யப்பட்டு அவர்களுக்கு தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் உறுதி செய்யப்பட்டால் அமைச்சர்கள் அந்த பதவியில் இருந்து விலக நேரிடும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியில் இருந்த போது தண்டனை கிடைத்ததால் தானாகவே பதவியில் இருந்து விலகினார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் அதிகாரம் சட்டமன்ற பேரவை தலைவருக்கு மட்டும் தான் உண்டு. ராகுல் காந்தி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற நிலையில் அவரது எம்பி பதவியை பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா தான் பதவி நீக்கம் செய்தார். இது போன்ற பல உதாரணங்கள் உள்ளது, என எடுத்துரைத்துள்ளார்.

மேலும், ஆளுநரை பலமுறை நேரில் சந்தித்து பேசி உள்ளேன் அவர் மிகவும் நல்ல மனிதர். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர். நேற்று நடந்த நடவடிக்கை கூட உணர்ச்சிவசத்தின் வெளிப்பாடாக இருக்கலாம். சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு தான் தேசிய கீதத்திற்கு கூட எழுந்து நிற்காமல் வெளியேறினார், எனவும் பேசியுள்ளார்.

இதையும் படிக்க: ஜூன் மாதத்தில் 36 தீர்மானங்கள்!