பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து அணை தற்போது100 அடியை எட்டவுள்ளது. இதனால் பவானி ஆற்றில் உபநீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மண் அணையான பவானிசாகர் அணை 105 அடி உயரமும் 32.8 டி.எம்.சி கொள்ளளவும் கொண்டது. இந்த அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர்ப்பிடிப்பு பகுதிகளான வடகேரளம், நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.

இதனால் ஒரே மாதத்தில் அணை 8 அடி உயர்ந்து தற்போது 100 அடியை எட்ட உள்ளது. அணை 100 அடியை எட்டியவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபநீர் வெளியேற்றப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் வருவாய்த்துறையினர், நகராட்சி நிர்வாகத்தினர் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

தற்போது அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 100 அடியை எட்ட உள்ளதால் பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை ஆறு மணி  நிலவரப்படி அணையின் நீர்மட்டம் நீர் மட்டம் 99.64 அடியாகவும், நீர் இருப்பு 28.44 டி.எம்.சி யாகவும், நீர் வரத்து வினாடிக்கு 1603 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்திற்கு 800 கன அடி நீர். கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீர். குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 100 கனஅடி நீர் என மொத்தம் 905 கன அடி நீர் வெளியேற்றம் செய்யப்பட்டு வருகிறது.