திருப்பூரில் பறவைகள் சரணாலயம்!

திருப்பூரில் பறவைகள் சரணாலயம்!

தமிழகத்தின் 17 வது பறவைகள் சரணாலயமானது திருப்பூர் நஞ்சராயன் குளம்.ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி.

பறவைகள் சரணாலயம்

திருப்பூரில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து 17 வது சரணாலயமாக நஞ்சராயன் குளம் அறிவிக்கப்பட்டு 312 ஏக்கர் பரப்பளவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள ரூ.7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கரில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம்.1498 இல் வெட்டப்பட்ட இந்தக் குளத்தில் எப்போதும் நீர் இருப்பு மற்றும் உகந்த காலநிலை காரணமாக பறவைகள் வந்து செல்ல ஏதுவாக இருந்து வருகிறது . இதன் காரணமாக ஜரோப்பா, ரஷ்யா, சைபீரியா, மங்கோலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சேன்ட் பைபர், கிரீன் ஹெரான், யூரேசியன் பார்பில், கிரேவாக் டெய்லர், டார்டர்,ஸ்பூன்பில், கார்க்கினி, கூழைகடா உள்ளிட்ட பறவைகள் இங்கு வருந்தோறும் வலசை வருகின்றன.

வலசை வரும் பறவைகள்

உலகிலேயே அதிக உயரத்தில் பறக்கும் பட்டைத்தலை வாத்துகள் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் குளிர் காலத்தில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இந்த குளத்துக்கு வலசை வருகின்றன.ஆகையால் இதனை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என திருப்பூர் இயற்கைக் கழகத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் கடந்த 2009 முதல் தொடர் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதனை ஏற்ற தமிழக அரசு,கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபையில் 17 வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் குளம் உருவாக்கப்படும் என அறிவித்தது.இதன்படி பொது பொதுமக்கள் பார்வையாளர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த பறவைகள் விளக்க மையம் ஏற்படுத்தப்படும் எனவும்,இம்மையம் பறவைகள் குறித்த பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு செயல்படும்.மேலும் சரணாலய பணிகளுக்காக ரூ.7.5 கோடி ஒதுக்கீடு செய்யப் படுவதாகவும் அப்போது வனத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

தற்போது 125.88 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் சரணாலய பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இக்குளம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்படும்போது திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒரு அறிவுசார் இடமாகவும், இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையிலான இடமாகவும் அமையும் என்பதால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பறவை நோக்கர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.