ஒரே மாதம் தான்,.. மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைகளால் தலைகீழான மருத்துவமனை நிலவரம்.!
முழு ஊரடங்கு எதிரொலியால் தமிழகத்தில் நோய் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் படுக்கைகளும் காலியாகி வருகின்றன.
தமிழகத்தில் கொரனோ இரண்டாவது அலை இரண்டு மாதங்களாக வேகமாக பரவி வந்த நிலையில் நோய் பாதித்த பலருக்கு நுரையீரல் பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்ட நிலையில் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை பலரும் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் அதிகபட்ச நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு வந்தன அதிகபட்சமாக மே 12ஆம் தேதி 29, 770 நபர்களுக்கு சென்னையில் கொரனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 7564 நபர்களுக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் அதிகபட்சமாக 35,000 நபர்கள் தினசரி நோய் பாதிப்பு ஏற்பட்டது. நோய் பாதித்தோர் சதவீதமும் 25% மேல் பதிவாகி இருந்தது. அன்றைய காலகட்டத்தில் மீதமுள்ள ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக பதிவாகியிருந்தது.
தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு கனிசமாக குறைந்துள்ளது. தொற்று பாதிப்பு சதவீதம் 9% குறைந்துள்ளது. சுகாதார கட்டமைப்புகளில் நாட்டில் சிறந்து விளங்கும் தமிழகம் தொடர்ந்து பரவும் நோய் பாதிப்புகளால் கடுமையான பாதிப்பிற்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டது.
தொடர்ந்து அரசின் சார்பில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது. கொரனோ சிகிச்சையளிக்கும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநகராட்சி சார்பில் செயல்படும் கொரோனோ கேர் மையங்களில் படிப்படியாக ஆக்சிஜன் அல்லாத படுக்கைகள் ஆக்சிஜன் படுக்கைகளாக தரம் உயர்த்தப்பட்டன.
அந்தவகையில் தற்போது சென்னையில் 11,412படுக்கைகள், கோவையில் 3,799 படுக்கைகள், ஈரோடு மாவட்டத்தில் 1133 மதுரையில் 3,701 ,திருச்சியில் 1843 படுக்கைகள் காலியாக உள்ளது. இதில் தற்போது தினசரி நோய் பாதிப்புகள் 10 சதவீதத்திற்கும் குறைவாக கண்டறியப்படும் நிலையில் நோய் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதால் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளது.
தற்போது தினசரி பாதிப்புகள் உடன் ஒப்பிடுகையில் சிகிச்சையிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து வருங்காலங்களில் நோய் பாதிப்புகள் மேலும் குறைந்திடவும் கொரோனா தொற்றில்லா தமிழகம் உருவாக்கிடவும் சுகாதாரத் துறையினர் முழு வீச்சில் பணிகளை துவக்கி உள்ளனர்.