அரசியல் செய்வதற்கு இது நேரமா? அதிமுகவினரை எச்சரிக்கும் அமைச்சர்!!

அரசியல் செய்வதற்கு இது நேரமா? அதிமுகவினரை எச்சரிக்கும் அமைச்சர்!!

முன்னாள் அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, இது அரசியல் செய்வதற்கான நேரமில்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மதுரை மாநகராட்சி மடீட்சியா வளாகத்தில் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கென ஏற்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொற்று நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில், தொழிற்சாலை பணியாளர்கள், போக்குவரத்துறையினர், ஆட்டோ ஓட்டுனர்கள், கட்டிட தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு என சுமார் 65,000 தடுப்பூசிகள், கடந்த 3 நாட்களாக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது. 

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கும் அவர்களது உதவியாளர்களுக்கும் மூன்று நேரங்களும் உணவுகள் வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கின் பயனாக மதுரையில் தொற்று பாதிப்பு குறைய ஆரம்பித்துள்ளது. மக்களை காப்பாற்றக் வேண்டிய இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் அரசியல் பண்ணுவதற்கு இது உகந்த நேரம் அல்ல. எதிர்கட்சியினர் அவர்களது ஆலோசனையை வழங்க அறிவுறுத்தி, இரு முறை நடந்த ஆலோசனைக்கூட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். 

கடந்த ஆட்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை  இருந்தது. இரு மாத தேர்தல் நேரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. மதுரை மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் வேண்டிய மருத்துவர்கள், செவிலியர்கள் தற்காலிகமாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும்  கிராமப்புறங்களில் உள்ள 100 ஊராட்சிகளில் 10 படுக்கைகள் அமைக்கப்பட்டு 420 ஊராட்சிகளிலும் செவிலியர்கள் மூலமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாக காய்ச்சல் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.