நீலகிரி கனமழை : அவசர உதவி எண்கள் அறிவிப்பு...எந்த நேரத்திலும் அழைக்கலாம்!!

நீலகிரி கனமழை : அவசர உதவி எண்கள் அறிவிப்பு...எந்த நேரத்திலும் அழைக்கலாம்!!

கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய அபாயகரமான மரங்கள் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட வன சரக அலுவலர்களிடம் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும், அவர்களது கைபேசி எண்ணையும்  கூடலூர் கோட்டம் மாவட்ட வன அலுவலர் வெளியிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த நான்காம் தேதி நள்ளிரவு முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய தொடர் சாரல் மழை முதல் மிதமான கனமழை வரை பெய்து வருகிறது.

இதனால் ஆங்காங்கே சிறிய அளவிலான மண் சரிவுகளும், மரங்கள் முறிந்து விழுந்த வண்ணம் உள்ளன. உடனடியாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினா மரங்களை அகற்றியும், மண் சரிவுகளை சீர் செய்து போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின்படி அபயகரமான மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கூடலூர், பந்தலூர் ஆகிய தாலுகாவில் பொது மக்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய மரங்கள் ஏதேனும் இருந்தால் அது தொடர்பான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலர்களிடம் பொது மக்கள் அளிக்குமாறு மாவட்ட வன அலுவலர் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் எந்த ஒரு அவசர தேவைக்கும் பொதுமக்கள் வனச்சரக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என அவர்களது கைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளார்.

அதன்படி

கூடலூர் - 9486036467
ஓவேலி - 9487989499
நாடுகாணி - 6381699287
பந்தலூர் - 8667325758
சேரம்பாடி - 9092320850
பிதர்காடு - 9342749789

ஆகிய 6 வனச்சரக அதிகாரிகளின் கைபேசி எண்களுக்கு பொதுமக்கள் எந்த நேரத்திலும் அழைக்கலாம் எனவும் மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.

மாலைமுரசு தொலைக்காட்சியின் Thread பக்கத்தில் இணைய || https://www.threads.net/@malaimurasutv_official

இதையும் படிக்க: பேருந்து நிழற்குடையை ஆக்கிரமித்த திமுக பேனர்... பயணிகள் அவதி!!