ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்…திருமாவளவனுக்கு உயர்நீதிமன்றம் விளக்கம்!

உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆர்.எஸ்.எஸ் பேரணி விவகாரம்…திருமாவளவனுக்கு உயர்நீதிமன்றம் விளக்கம்!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு வழக்கு தொடர்பாக முக்கியமான விளக்கத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி

தமிழ்நாடு முழுவதும் வரும் 2 ஆம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமாவளவன் மனு

இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க  தனி நீதிபதி இளந்திரையன் மறுத்து விட்டார்.

இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. வழக்கில் ஒரு தரப்பாக இல்லாத நிலையில், தனி நீதிபதி உத்தரவை திரும்ப பெறக் கோரி மனு தாக்கல் செய்ய முடியாது என்றும் மேல் முறையீடுதான் தாக்கல் செய்ய முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர்நீதிமன்றம் விளக்கம்

இதனைத் தொடர்ந்து மேல் முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் இன்று திருமாவளவன் தரப்பில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது.

திருமாவளவன் மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்குகள்  குற்றவியல் வழக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அந்த உத்தரவை எதிர்த்து  உச்ச நீதிமன்றத்தில்தான் மேல் முறையீடு  செய்ய முடியும் என்றும், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் விளக்கம் அளித்தனர்.