நீலகிரியில் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு!

நீலகிரியில் வியாபாரிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு!

நீலகிரி: நீலகிரியில், தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்ட கடந்த ஒரு வாரமாக எதிர்ப்புகள் வாரமாக எதிர்ப்புகள் வந்த நிலையில், தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட உதகை நகராட்சி தினசரி சந்தையை இடித்து புதிய கட்டிடம் கட்ட, கடந்த ஒரு வாரமாக  மார்க்கெட் வியாபாரிகள்  தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து முதலமைச்சருக்கு தபால் மூலம் கருணை மனுவும் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், இன்று நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரை, உதகையிலுள்ள தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று முற்றுகையிட்டனர். மார்க்கெட் பிரச்சனை சம்பந்தமாக ஆ. இராசாவிடம் முறையிட வேண்டும் என ஆயிரக்கணக்கான வியாபாரிகள் தமிழகம் மாளிகை முன்பு உள்ள புல் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா அரசாங்கத்திடம் பணம் எதுவும் இல்லை. ஆனால் தனது மேம்பாட்டு நிதியில் இருந்து 192 வியாபாரிகளுக்கும் முன்னுரிமை அளித்து தற்காலிக கடைகள் அமைத்து, அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததோடு, மாதம்தோறும் அதற்குண்டான வாடகையை வியாபாரிகள் தர வேண்டும் எனவும் கூறினார்.

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா உறுதியளித்த பின்பு, வியாபாரிகள் அதனை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி சிறிது பரபரப்புடன் காணப்பட்டது.

இதையும் படிக்க: போலீசிடம் கெத்து காட்ட நினைத்து வழக்குகளை வாங்கிய நபர்கள்!