போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்!

போக்குவரத்து காவலரை தாக்கிய இளைஞர்!

சேலம் மாநகர் தெற்கு போக்குவரத்து பிரிவில் போக்குவரத்துக் காவலராக பணியாற்றி வருபவர் பாண்டியன். இவர் வழக்கம் போல சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள  காந்தி சிலை முன்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த முன்னாள் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வத்தின் உறவினரின் மகன் கோகுல்ராஜ் அலைபேசியில் பேசிக் கொண்டு இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக கூறப்படுகிறது.

காவலருடன் சண்டை

அதை கேட்ட போக்குவரத்து காவலர் பாண்டியனுக்கும் கோகுல்ராஜ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வாக்குவாதம் முற்றிய நிலையில் கோகுலராஜ் போக்குவரத்து காவலரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காவலரின் மூக்கு தண்டுவட பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில்  சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

காவல்நிலையத்தில் விசாரணை

இந்த நிலையில் போக்குவரத்து காவலரை தாக்கிய அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் உறவினர் மகன் கோகுல்ராஜை சேலம் நகர காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போக்குவரத்து காவலர் பாண்டியனை மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 

அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டி வந்த நபரை தட்டிக் கேட்ட காவலரை தாக்கிய சம்பவம் பரபரப்பை சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.