அமராவதி ஆற்றில் கழிவு நீர்; குடிநீர் வினியோகம் பாதிப்பு..!

கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட செட்டிபாளையம் கதவணை அருகே அமராவதி ஆற்றில் தோல் தொழிற்சாலை கழிவு நீர் கலப்பதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

கரூர் அருகே செட்டிப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு கதவணை கட்டப்பட்டுள்ளது.

இந்த அணையின் மூலம் விஸ்வநாதபுரி, அப்பிபாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர் உள்ளிட்ட 20-க்கும் மேலான கிராமங்களுக்கு பாசன வசதி ஏற்படுத்தப்பட்டன. மேலும், இப்பகுதி பொதுமக்களுக்கு அணையின் அருகே அமைக்கப்பட்டுள்ள கிணறுகள் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தோல் தொழிற்சாலையிலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை  அப்படியே அமராவதி ஆற்றில் விடுவதாக புகார் எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், அழகாபுரி அணையில் இருந்து வெளியேறும் இந்த கழிவுநீரானது கரூர், செட்டிபாளையம் கதவனைப் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நுரை பொங்க காட்சியளிப்பதோடு, மாசுபட்ட தண்ணீர் நிறம் மாறி இருப்பதாகவும் கூறுகின்றனர்.

இந்த நீரை பயன்படுத்தியதால் இப்பகுதி பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அணையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டாம் என்று ஊராட்சி தலைவர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் மற்றும் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க   | விவசாயிகளுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்!