புதிய வாகனத்துக்குள் அசால்டாக புகுந்த பாம்பு..! பார்ட் பார்ட்டாக பிச்சு போட்ட மீட்பு பணியினர்..!
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு எண் பெற வந்த வாகனத்தில் புகுந்த பாம்பு; புதிய வாகனத்தை முழுவதும் பிரித்த தீயணைப்பு படையினர் போராடி அப்பாம்பை பிடித்தனர்; இதனால் ஓட்டுநர் உரிமம் வளாகத்தில் பரபரப்பு எற்பட்டது.
திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் வளாகம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள் தங்களது வாகனங்களுக்கான பதிவு எண்ணை பெறுவதற்கு வாகனங்களை கொண்டு வந்து நிறுத்தி அதிகாரிகளின் பார்வைக்கு வைத்து சோதனைக்கு பின்னர் புதிய வாகனங்களுக்கு பதிவு எண் பெற்றுச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில், இன்று திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவர் டிவிஎஸ் ஜூபிடர் என்ற புதிய வாகனத்தை வாங்கி வாகன எண் பதிவிற்காக காத்திருந்தார். அந்த வாகனத்தை வாகன விற்பனை நிலையத்தில் இருந்து ஊழியர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து நிறுத்தி உள்ளனர்.
வாகனத்தை பார்வையிட வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சென்றபோது அந்த புதிய வாகனத்தில் பாம்பு ஒன்று புகுந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை அடுத்து தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய உதவி அலுவலர் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அந்தப் பாம்பு சுமார் மூன்று அடி நிளம் கொண்டதாக கொம்பேறி மூக்கன் என்னும் விஷத்தன்மை கொண்ட பாம்பு என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாம்பு வாகனத்துக்குள் அங்குமிங்கும் சென்றதால் சுமார் ஒரு மணி நேரம் போராடிய தீயணைப்பு வீரர்கள் வாகனத்தை முழுமையாக அதன் பாகங்களை கழட்டி சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்தனர்.
பின்னர் அது வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவம் வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க | பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் நிலை என்ன? - உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி.