' மல்யுத்த வீரர்கள் ' வழக்கு: ஜூலை 4-ல் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்...!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றுசாட்டு வைத்து அவரை கைது செய்யவேண்டும் எனக்கூறி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு மாத காலத்திற்கும் மேல் நடைபெற்று வந்த இந்த போராட்டத்தில் குற்றம் சாட்ட பட்ட பாஜக எம்.பி மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.
இதற்கிடையே புதிய பாராளுமன்ற திறப்பு விழாவின்போது, அரசின் கவனத்தை ஈர்க்க மல்யுத்த வீரர்கள் அமைதி பேரணியாக புதிய பாராளுமன்ற கட்டடம் நோக்கி செசென்றனர். அப்போது பாதுகாப்பு காவலர்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தனர்.
இதன் தொடர்ச்சியாக மல்யுத்த வீரர்கள் தாங்கள் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக தாங்கள் கஷ்டப்பட்டு போராடி நாட்டுக்காக பெற்ற பதக்கங்களை கங்கை ஆற்றில் வீசுவதாக முடிவெடுத்து ஹரித்துவார் சென்றனர். அப்போது அங்கிருந்த ஹரித்துவார் மக்களும் விவசாயிகள் அமைப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி வீரர்களை சமாதானப்படுத்தினர். பதக்கங்களை அவர்கள் ஆற்றில் வீசினால் இந்தியா தன்னிடம் உள்ள இரண்டு உயரிய பெருமைகளான தங்க பதக்கங்களை இழந்து விடும் என கூறி அவர்களின் முடிவை மாற்ற கூறி பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் வீரர்கள் ஆற்றில் பதக்கங்களை வீசும் முடிவை கைவிட்டனர்.
இதனையடுத்து, மல்யுத்த வீரர்கள் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவது போல வந்து, பின்னர் வீசாமல் சென்றது எல்லாம் போராட்டத்தின் ஒரு யுக்தியே என விமர்சித்திருந்தார் குற்றம் சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சிங். மேலும் அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட இரண்டு வழக்குகள் பதியப்பட்டும் இன்னும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை . மேலும், பிரதமரை இழிவுபடுத்தியதாக மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் வினேஷ் போகத் ஆகிய மூன்று பேர் மீதும் அவதூறு வழக்கு பதியப்பட்டது.
இதற்கிடையே, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகுர் மல்யுத்த வீரர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போராட்ட வீரர்கள் :
மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும்,
மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், மேலும்,
தற்போதைய தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குறிப்பாக
மல்யுத்த கூட்டமைப்பில் பிரிஜ் பூஷன் சிங்கின் குடும்பத்தினர் யாரும் இடம்பெறக் கூடாது என்றும், அதோடு,
கடந்த 28 -ம் தேதி நடந்த போராட்டத்தை அடுத்து தங்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் 5 கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர்.
இதையடுத்து, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகுர் அவர்கள் மீதான வழக்குகள் திரும்பபெறப்படும் என்று உறுதியளித்தார். அதோடு, பிரிஜ் பூஷன் மீதான விசாரணை ஜூன் 15-ம் தேதி முடிவடையும் என்றும் அதுவரை போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதற்கிணங்கி போராட்டத்தில் ஈடுபடா வீரர்கள் தங்களது போராட்டத்தை ஜூன் 15 வரை ஒத்தி வைப்பதாகவும் மேலும் இதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர்வதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூலை 4-ஆம் தேதி நடைபெறும் என்றும், தேர்தல் அதிகாரியாக காஷ்மீர் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி மகேஷ் மிட்டல் குமார் செயல்படுவார் என்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | இந்திய மாணவர்களை திருப்பி அனுப்பும் முடிவிற்கு, கனடா பிரதமர் தடை!