இரண்டே இரண்டு பெட்டிகளில் 109 உயிருள்ள விலங்குகள்..! கடத்த முயன்ற இரண்டு இந்திய பெண்கள்.!
பாங்காக் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து சென்னை செல்ல இருந்த இரண்டு பெண்களின் பயணப்பெட்டிகளை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்து பார்த்த போது, அதில் 109 உயிருள்ள விலங்குகளை கடத்த முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜூன் 27 ம் தேதி அன்று, பாங்காக் ஸ்வர்ணபூமி விமான நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் செல்ல இருந்த பயணிகளை, இன்ஸ்பெக்டரேட் அதிகாரிகளுடன் சேர்ந்து ஆய்வு செய்தனர்.
மேலும், அந்த விமான நிலைய மீன்வள சோதனைச் சாவடி அதிகாரியும், சுங்கத்துறை அலுவலக அதிகாரிகளும் ஆய்வில் இணைந்தனர். அப்போது சென்னை விமான நிலையத்திற்கு தாய் ஏர்வேஸ் விமானத்தில் பயணிக்க இருந்த இரண்டு பெண்களான நித்யா ராஜா, ஸாக்கியா சுல்தானா இப்ராஹிம் என்பவர்களின் suitcase ஐ x ray இயந்திரங்கள் மூலம் ஆய்வு செய்துள்ளனர்.
அதில், இரண்டு வெள்ளை முள்ளம்பன்றிகள், இரண்டு ஆர்மடில்லோ எனப்படும் நல்லங்குகள், 35 ஆமைகள், 50 பல்லிகள், 20 பாம்புகள் ஆகியவை அந்த இரண்டு பெட்டிகளில் உயிருடன் திணித்து வைக்கப்பட்டிருந்தன.
இதுகுறித்து தாய்லாந்து அதிகாரிகள் தரப்பில், கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளில் குறைந்தது இரண்டு விலங்குகள் இறந்து விட்டதாகவும் பலவற்றுக்கு அளவுக்கு மிஞ்சிய நீர் இழப்பு ஏற்பட்டிருந்ததாகவும் கூறினர்.
உயிருள்ள விலங்குகளை கடத்த முயன்ற குற்றத்திற்காக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த இரு பெண்களையும் காவல் துறையினர் கைது செய்தனர். சென்னை கொண்டு சென்றபின் இந்த விலங்குகளை என்ன செய்ய திட்டமிட்டிருந்தனர் என்பது குறித்தும், மீட்கப்பட்ட விலங்குகள் எங்கு ஒப்படைக்கப்பட்டன போன்ற எந்த தகவலும் தாய்லாந்து அதிகாரிகள் தெளிவாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிராஃபிக் எனும் வனவிலங்கு நல அமைப்பு இந்த ஆண்டு மார்ச்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்திய விமான நிலையங்களில் சென்ற 2011 முதல் 2020 வரை 70,000 வனவிலங்குகளும் அவற்றின் உடல்பாகங்களும் கைப்பற்றப்பட்டன என தெரிவித்துள்ளது.
இவர்களது ஆய்வில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன.