குண்டு மழைகளுக்கு இடையே குவா, குவா சத்தம்... உக்ரைன் சுரங்கத்தில் பிறந்த குழந்தை!!

உக்ரைனில் தொடர்ந்து நடந்து வரும் போர் மத்தியில் தலைநகர் கீவ் மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சம் அடைந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

குண்டு மழைகளுக்கு இடையே குவா, குவா சத்தம்...  உக்ரைன் சுரங்கத்தில் பிறந்த குழந்தை!!

ரஸ்சியாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் நாட்டில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரஷிய ராணுவம் தொடர்ந்து குண்டுமழைகளை பொழிந்து வருகிறது.

இதற்கிடையில்,  ராணுவ தாக்குதலையில் இருந்து தப்பிக்க மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கின்றனர். ஏராளமான மக்கள் மெட்ரோ ரெயில் சுரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் கீவில் உள்ள மெட்ரோ சுரங்கத்தில் தஞ்சம் அடைந்துள்ள 23 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து வலியால் துடித்து கொண்டிருந்த அவருக்கு அங்கிருந்த பெண்களே பிரசவம் பார்த்தனர். இரவு 8.30 மணி அளவில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பெண்ணையும், குழந்தையையும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர் இருவரையும் பரிசோதித்ததில் தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக தெரிவித்தார். இந்த குழந்தைக்கு மியா என பெயரிடப்பட்டது. குண்டு மழைக்குள் பிறந்து இந்த குழந்தையை அற்புதம் என்று அவர்கள் சொல்லி வருகின்றனர்.

இதேபோல், இன்னொரு பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதனை அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து, சில உருக்கமான தகவல்களையும் பகிர்ந்துள்ளார். அதில், இறப்பு ஒருபக்கம் இருந்தாலும், பிறப்பு மற்றொரு நிகழும்.. இது தான் இயற்கை விதி.. இதனை யாரால் மாற்றமுடியும்? என உருக்கமாக கூறியுள்ளார்.