வறட்சியால் பசி பட்டினி......உதவி வேண்டி காத்திருக்கும் அவலம்.......!!!
கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் நான்கு ஆண்டுகளாக மழை பொய்த்ததால் பேரழிவை எதிர்நோக்கியுள்ளது.
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை 22 மில்லியனாக அதிகரித்துள்ளது என ஐநா அவையின் உலக உணவு திட்ட அமைப்பு கூறியுள்ளது.
வறட்சி:
கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக மழை இல்லாத காரணத்தால் 40 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதாகவும் பஞ்சத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
வறட்சி காரணம்:
நான்கு ஆண்டுகளாக தொடர்ச்சியாக மழை இல்லாத காரணத்தால் மில்லியன் கணக்கான கால்நடைகள் இறந்துள்ளன எனவும் பல ஏக்கர் அளவிலான பயிர்கள் அழிந்துள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் 1.1 மில்லியன் மக்கள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக அவர்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
பசி பட்டினியால் பாதித்த மக்கள்:
ஆப்பிரிக்காவில் பரவி வரும் பஞ்சம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களை காக்க உலக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார் உலக உணவு திட்ட அமைப்பின் நிர்வாக இயக்குநர் டேவிட் பீஸ்லி.
மேலும் இந்த வறட்சி இன்னும் தொடரும் எனவும் உயிர்களைக் காப்பாற்றவும் பசி பட்டினியில் மக்கள் மூழ்காமல் இருக்கவும் தேவையான ஆதாரங்களை பெற வேண்டும் எனவும் டேவிட் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் 13 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாக உலக உணவு திட்ட அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. மேலும் நன்கொடை வழங்குமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக உதவி வருவதி தேய்வு ஏற்பட்டது. ரஷ்யா போரினால் உலக அளவில் அத்தியாவசிய பொருள்களில் விலை அதிகரிப்பு ஏற்பட்டது. இதனால் உதவி பெறுவதில் முற்றிலும் தடை ஏற்பட்டது.
இந்த ஆண்டின் இடைப்பகுதியில் கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாடுகளில் மழை பொய்த்ததால் தேவைகளின் அளவு மேலும் அதிகரித்துள்ளதாக உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் பசி பட்டினி:
செப்டம்பர் மாதத்திற்குள் 22 மில்லியன் மக்கள் பசி பட்டினியால் பாதிக்க நேரிடும் எனவும் கூறியுள்ளது. இந்த எண்ணைக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் சரியான நேரத்தில் உதவி கிடைக்கவில்லையெனில் பாதிப்பு இன்னும் அதிகரிக்கும் எனவும் உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.
உதவிக்காக காத்திருப்பு:
கென்யா, சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டு மக்களுக்கு உதவ 41.8 கோடி ரூபாய் தேவை எனவும் அனைத்து நாடுகளும் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது உலக உணவு திட்ட அமைப்பு.