கச்சத்தீவை இந்தியாவிற்கு குத்தகைவிட இலங்கை அரசு திட்டம்? போர்க்கொடி ஏந்தியுள்ள இலங்கை மீனவர்கள்..!
கச்சத்தீவை இந்தியாவிற்கு குத்தகைக்கு விடக்கூடாது என போர்க்கொடி பிடித்துள்ள இலங்கை மீனவர்கள், இதனால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், தமிழகத்தின் ஒரு பகுதியாக இருந்த கச்சத்தீவு மறைந்த முதலமைச்சர் கருணாநிதியால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு தமிழக மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சியினரும் அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களும் கைது செய்யப்பட்டு வந்தனர். இதனால் இந்தியா- இலங்கை அரசுகளுக்கு கடும் நெருக்கடி நிலவியது. இதனிடையே தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றபோது, கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
இந்தநிலையில் இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்திய அரசு பெருமளவு கடனுதவிகளை வழங்கி வருகிறது.
இதனால் இந்தியாவிடம் இருந்து அந்நாடு பெற்ற கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்கு இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. அப்படி நீண்டகால குத்தகைக்கு கச்சத்தீவு கொடுக்கப்பட்டால் இருநாட்டு மீனவர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று கருதப்படுகிறது.
இந்த சூழலில், மன்னாரில் உள்ள அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட மீனவர் கூட்டுறவு சங்க சமூகத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கத்தீவை இந்தியாவிற்கு குத்தைக்கு விட்டால் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து இருப்பதாக கூறியுள்ளார்.