ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது! ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது! ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம்

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளிக்கும் நடவடிக்கைகள் கூடாது என வலியுறுத்தி, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தியா தலைமையில் நடைபெற்ற ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் ஆப்கன் தொடர்பான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 15 உறுப்பு நாடுகளில் 13 நாடுகள் வாக்களித்தன. இதையடுத்து தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.


அந்த தீர்மானத்தில் பிற நாடுகளை அச்சுறுத்தவோ அல்லது தாக்கவோ ஆப்கன் பிராந்தியத்தை தலிபான் பயன்படுத்தக் கூடாது என்றும்,  பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, பயிற்சி அளிப்பது, பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிடுவது, நிதி திரட்டுவது போன்ற செயல்பாடுகளுக்கும் ஆப்கனில் இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆப்கன் மக்கள் மற்றும் வெளிநாட்டினர் எப்போது வேண்டுமென்றாலும் தரை அல்லது வான் மார்க்கமாக வெளிநாடு செல்ல பாதுகாப்பு அளிக்கப்படும் என, தலிபான் உறுதி அளித்துள்ளதன்படி தலிபான்கள் செயல்பட வேண்டும் என்றும், காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுவதாகவும் இந்த கூட்டத்தில் தீர்மான நிறைவேற்றப்பட்டன.