ரஷ்ய தூதரகம் மீதான தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு!
ஆப்கானிஸ்தான் தலைநகரமான காபூலில் செப்டம்பர் 5 அன்று ரஷ்ய தூதரகம் மீது நடந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் என்று அழைக்கப்படும் ”இஸ்லாமிய அரசு” இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக ஊழியர்கள் இருவர் உள்ளிட்ட 25 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் நடத்திய ஐ.எஸ்
ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த வெளிநாட்டினர் ஒருவர் இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அவ்வமைப்பு கூறியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு செயல்படும் ஒரு நாட்டின் தூதரகத்தின் மீது நடந்த முதல் தாக்குதல் இதுவாகும். கொல்லப்பட்ட தூதரக ஊழியர்களில் ஒருவர் துணைச் செயலர் என்றும் மற்றொருவர் பாதுகாவலர் என்றும் ரஷ்ய புலனாய்வுக் குழு உறுதிபடுத்தியுள்ளது. இருவரும் ரஷ்யர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : ஆப்கானிஸ்தான் ரஷ்ய தூதரகத்திற்கு வெளியே குண்டுவெடிப்பு!
தூதரகத்தின் மீதான முதல் தாக்குதல்
ஒரு வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து காபூலில் தூதரக உறவைக் கொண்டிருக்கும் சில நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் தலிபான் கட்டுப்பாட்டில் வந்தபிறகு பலமுறை குண்டுவெடிப்புகள் நடந்துள்ளது. இந்தத் தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கே என்னும் அமைப்பின் மீது தலிபான் குற்றம் சாட்டியது. ஆகஸ்ட் மாதத்தில் மாலை தொழுகையின் போது காபூல் மசூதியில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது, இதில் பலர் கொல்லப்பட்டனர். அதற்கு பிறகு நடந்த பெரும் தாக்குதல் இதுவாகும்.