ராஜ்நாத் சிங் மங்கோலிய பயணம் ஏன்?

ராஜ்நாத் சிங் மங்கோலிய பயணம் ஏன்?

கிழக்கு ஆசிய நாடுகளுடனான கூட்டு நட்புறவு முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முதல் வரும் செப்டம்பர் 7 வரை மங்கோலியா நாட்டிற்கு அரசுமுறைப் பயணம் செல்கிறார்.

மங்கோலியா செல்லும் முதல் பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் மங்கோலியாவிற்கு பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும். இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கேந்திர கூட்டுமுயற்சியை மேலும் மேம்படுத்துவதற்கு இந்தப் பயணம் வழிவகை செய்யும் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு இராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை

ராஜ்நாத்சிங் தமது பயணத்தின் போது மங்கோலியா பாதுகாப்பு அமைச்சர் லெஃப்டினன்ட் ஜென்ரல் சைகான் பயருடன் இருதரப்பு பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வார். இந்த பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களும் இந்தியா மற்றும் மங்கோலியா இடையேயான இராணுவ ஒத்துழைப்பை ஆய்வு செய்வார்கள்.

இருதரப்பு உறவை வலுப்படுத்துவதற்கு புதிய முன்முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடத்துவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தொடர்ந்து மங்கோலிய அதிபர் குரெல்சுக், அந்நாட்டு நாடாளுமன்ற அவை தலைவர் ஜண்டன்ஷாடர் ஆகியோரையும் ராஜ்நாத் சிங் சந்தித்துப் பேசுகிறார்.