சட்டவிரோதமாக கடல் வழியாக வெளியேற முயன்ற 85 பேர் கைது!

சட்டவிரோதமாக கடல் வழியாக வெளியேற முயன்ற 85 பேர் கைது!

இலங்கை கடற்படையினர் செப்டெம்பர் 11 அதிகாலை மட்டக்களப்புக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட கடற்பாதுகாப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கண்காணிப்பு பணியில் கடற்படை

சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை ஒடுக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படையானது தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கிய வழக்கமான தேடுதல் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற ஒரு முயற்சியாக, கிழக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட எஸ்.எல்.என்.எஸ். ரணவிக்ரம இன்று மட்டக்களப்புக்கு அப்பால் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கிடமான உள்ளூர் மீன்பிடி இழுவைப்படகு ஒன்றைக் கண்டனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் 85 பேர் கடல் வழியாக வெளிநாட்டிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில்  படகு நடத்துபவர்கள் உட்பட 60 ஆண்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட 14 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 11 நபர்கள் ஆகியோர் இருந்துள்ளனெர்.

பறிமுதல் செய்யப்பட்ட படகு

இந்த சட்டவிரோத கடல் பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி இழுவை படகையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, மூதூர், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் மடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சட்டவிரோத குடியேற்றவாசிகள் மற்றும் பல நாள் மீன்பிடி இழுவை படகு தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்படவுள்ளனர்.

சந்தேகத்திற்குரியவர்கள் கைது

இதேவேளை, கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் மட்டக்களப்பு கடற்கரை பகுதியில் போலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, ​​இலங்கை கடற்படையினர் ரணவிக்ரமவினால் கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி இழுவைப்படகுக்கு ஆட்களை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களும் அவர்களது படகுகளும் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி போலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.