சாலையை மறித்து தடுப்புகள்...!! தட்டிக்கேட்ட வாலிபரை பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்த எஸ்.ஐ..!!

சாலையை மறித்து தடுப்புகள்...!! தட்டிக்கேட்ட வாலிபரை பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்த எஸ்.ஐ..!!

நாகையில் அரசு பேருந்து செல்லமுடியாமல் காவல்துறை தடுப்பு அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபரை காவல் உதவி பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து கைது செய்துள்ளார்.

புதுச்சேரி தமிழக எல்லையான நாகப்பட்டினத்தை அடுத்த நாகூர் வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராய கடத்தலை தடுக்கும் வகையில் திருமருகல் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நான்கு சாலைகளில் இரண்டு சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசு பேருந்து மற்றும் பெரு வாகனங்கள் செல்ல முடியாமல் பயணிகள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தடுப்புகள் அடைக்கப்பட்டு இருந்ததால் கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினம்  வந்த இரண்டு அரசு பேருந்துகள் பயணிகளுடன் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை கண்ட அவ்வழியே சென்ற உள்ளூர் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சிலர் தடுப்புகளை அகற்றி அரசு பேருந்து எளிமையாக செல்ல வழிவகை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.  இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை கடுமையாக தாக்கி ஒருமையில் பேசினார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த உதவி ஆய்வாளர் பழனிவேல் போராட்டம் நடத்திய நபரை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி, காவல் வாகனத்தில் ஏற்றி தனது பூட்ஸ் காலால் முகத்தில் உதைத்து அடாவடியில் ஈடுபட்டார். தொடர்ந்து காவல் வாகனத்தில் ஏற்றிய பிறகும் வாகனத்தின் உள்ளே இருந்த  காவலர்கள் கைது செய்யப்பட்ட நபரை தொடர்ந்து தாக்கியபடி காவல் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் பயணிகள் வெகுநேரம் சிரமபட்டதை அடுத்து வாக்குவாதத்திற்கு பிறகு தடுப்புகள் அகற்றப்பட்டு பேருந்துகள் செல்ல வழிவகை செய்யப்பட்டது.

அரசு பேருந்து எளிமையாக செல்லும் வகையில் காவல் தடுப்புகளை அகற்ற வலியுறுத்திய நபரை காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் மனிதத் தன்மையே இல்லாமல் அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.