முன்னாள் டிஜிபியின் பேத்திக்கு கொடுமை...! தாய் மீது போக்சோ...!! முன் ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்...!!!

மகள் மீதான பாலியல் தாக்குதல் தொடர்பாக புகாரளிக்காதது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கில், ஓய்வுபெற்ற பெண் டிஜிபி திலகவதியின் முன்னாள் மருமகளுக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

முன்னாள் பெண் டிஜிபி திலகவதியின் மகன் பிரபு திலக் மற்றும் ஷ்ருதி என்பவருக்கும் 2007ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று, இருவரும் தனித்தனியாக வாழும் நிலையில், இரு குழந்தைகளும் தந்தையான பிரபு திலக்கின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி, தாய் ஷ்ருதி வீட்டில் இருந்து தனது ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வரச் சென்ற தனது மகளை, ஷ்ருதி திட்டியதாகவும், ஷ்ருதியின் சகோதரர் விஜய் ஆனந்த், பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டதாகவும், பிரபு திலக், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கில் தாங்கள் கைது செய்யப்படக் கூடும் என தெரிவித்து, முன் ஜாமீன் கோரி ஷ்ருதியும், அவரது சகோதரர் விஜய் ஆனந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், மகள் மீதான பாலியல் தாக்குதல் குறித்து புகார் தெரிவிக்காத ஷ்ருதி மீதான போக்சோ குற்றச்சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 6 ஆறு மாதங்கள் மட்டுமே தண்டனை விதிக்க முடியும் எனக் கூறி, அவருக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10:30 மணிக்கு வடபழனி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், சம்பவம் நடந்த போது எடுக்கப்பட்ட வீடியோவில், புகாரில் குறிப்பிட்டுள்ளபடி எந்த சம்பவமும் நடைபெறவில்லை என விஜய் ஆனந்த் தரப்பில் கூறப்பட்டாலும், அதுகுறித்து தற்போதைய நிலையில் எந்த ஆய்வும் மேற்கொள்ள முடியாது எனக் கூறி, அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிக்க || "கச்சத்தீவு மீட்பு; ஆலோசித்து நடவடிக்கை" எல்.முருகன் நம்பிக்கை!