டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த திருடர்களின் 30 வங்கிக் கணக்குகள் முடக்கம்...

பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.

டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில்  கொள்ளையடித்த திருடர்களின்  30 வங்கிக் கணக்குகள் முடக்கம்...

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாரத வங்கி ஏ.டி.எம் டெபாசிட் இயந்திரங்களில் ஹரியானா மாநில கொள்ளை கும்பல் நூதன முறையில் தங்களின் கைவரிசையைக் காட்டி லட்சக் கணக்கில் கொள்ளையடித்துச் சென்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் இதுவரை இச்சம்பவம் தொடர்பாக 17 புகார்கள் காவல் துறையினரால் பெறப்பட்டுள்ளது.

இந்த கொள்ளை தொடர்பாக  ஹரியானா மாநில கொள்ளையர்கள் அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத் மற்றும் நஜீம் ஹுசைன் ஆகிய 3 பேரையும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்ட  சவுக்கத் அலி என்பவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்திய ஏ.டி.எம் கார்டுகளின் 30 வங்கிக் கணக்குகளை சென்னை காவல்துறையினர் முடக்கியுள்ளனர். மேலும், தமிழகம் போன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஹரியானா கொள்ளையர்கள் தங்களின் கைவரிசையைக் காட்டியது தெரியவந்துள்ளது.