பெண் குழந்தை பிறந்ததால் விபரீத முடிவு எடுத்த தாய் - மகன்..! போலீசார் விசாரணை..!

பெண் குழந்தை பிறந்ததால் விபரீத முடிவு எடுத்த தாய் - மகன்..! போலீசார் விசாரணை..!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி சிவகாமி(55). இவருக்கு சந்தோஷ், சுதாகர், முரளி என மூன்று மகன்கள் உள்ளனர். ஏற்கனவே சந்தோஷ், சுதாகர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முரளி (27) ஒரு வருடத்திற்கு முன்பு இந்துஜா(20) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார் 

இந்த நிலையில், நேற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இந்துஜாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் முரளி மற்றும் முரளியின் தாயார் சிவகாமி ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று பெண் குழந்தையை பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

பின்னர் பெண் குழந்தை பிறந்து விட்டதால் இருவரும் வீட்டில் சமைத்து வைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முரளியின் உடலில் அதிக ரத்த காயங்கள் காணப்பட்டதால் கொலையாக இருக்க வாய்ப்பிருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.