சாலையில் செல்லும் பெண்களை  ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்... தட்டிக்கேட்டால் துப்பாக்கியை காட்டி மிரட்டல்...

சாலையில் நடந்து செல்லும் பெண்களை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞரை தட்டிக்கேட்டால் மிரட்டல் விடுப்பதாக பரபரப்பு.

சாலையில் செல்லும் பெண்களை  ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்... தட்டிக்கேட்டால் துப்பாக்கியை காட்டி மிரட்டல்...

கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் சாலை ரயில்வே கேட் பகுதி பிரதான போக்குவரத்து பகுதியாக உள்ளது. இதனால் மாணவிகள், பெண்கள் அவ்வழியாக அதிகளவில் செல்வர். இந்த நிலையில் அச்சாலையில் இளைஞர் ஒருவர் நின்று கொண்டு, செல்லும் பெண்களை செல்போனில் படம் எடுத்து வந்துள்ளார். இதனை பார்த்த சிலர் அவரிடம் கேட்டப்போது இளைஞர் கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்தது.

அதாவது, செல்போனில் பெண்களை படம்பிடிப்பதாகவும், அவரிடம் இது குறித்து கேட்டால் துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகவும், காட்டூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த இளைஞர் போலீஸ் வாகனத்தை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். எனினும் போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் கோவை பீளமேடு நவ இந்தியாவை சேர்ந்த சமீர் உல் ஹக் (37) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 2 துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் வைத்திருந்த பென் டிரைவை சோதனை செய்தனர். அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சாலைகளில் செல்லும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை அவர்களிடம் காட்டி பணம் கேட்டு மிரட்டியது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர் மீது தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துவது, ஆயுத குற்ற சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.