புகாரியில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்!

புகாரியில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம்!

ஊரப்பாக்கம் புகாரி உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமாக புகாரியில் கடந்த 13ம் தேதி திருவண்ணாமலையை சேர்ந்த மோகன்(27), பவித்ரா(25), ஸ்ரீவிவிக்ஷா(6), தல்கிய்த்(3) ஆகியோர் மதியம் உணவு உண்ண குடும்பத்தோடு சென்றிருக்கிறார்கள். அப்போது சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கன், ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். 

பின்னர் வீட்டிற்கு  சென்று இரவு உறங்கினர். உணவு சாப்பிட்ட அனைவருக்கும் கடுமையான வயிற்றுவலி, வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர். ஆனால் தொடர்ந்து உடல் நலம் சரியாகததால் தற்போது கூடுவாஞ்சேரியில் உள்ள தீபம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதுத் தொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணை செய்து உணவு பாதுகாப்பு துறையில் புகாரளிக்க அறிவுறுத்தியுள்ளனர். அதே போல் கடந்த 11ம் தேதி வரதராஜபுரத்தை சேர்ந்த காதர் பாஷா, குடும்பத்தினர் தனது மனைவி, குழந்தை, மனைவியின் சகோதரருடன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக உணவு உண்ண இரவு சென்றுள்ளனர். புகாரி உணவகத்தில் மட்டன் பிரியாணி, நாண், கிரில் சிக்கன் ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். 

பின்னர் வீடு திரும்பிய பிறகு காதர் பாஷா உட்பட குடும்பத்தினர் தில்சதிர்ஃபானா, பரிஷா அஸ்பியா, முகமது ஹரிஷ் மதர், உள்ளிட்ட அனைவருக்கும் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு, என உடல் நலம் பாதிக்கப்பட்டு அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தை பரிஷா அஸ்பியா, மற்றும் முகமது ஹரிஷ் மதர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கிளாம்பாக்கம் அடுத்த ஊரப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் புகாரி உணவகத்தில் தரமற்ற உணவை தொடர்ந்து விற்பனை செய்து வருவதால் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பாதுகாப்புத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிக்க:8 வருடமாக 144 தடை உத்தரவில் இருந்த கிராமம்... நடந்தது என்ன?