தஞ்சையில் எஸ்.பி. கேட்டதாக 6 கோடி லஞ்சம்! இன்ஸ்பெக்டர், எஸ் ஐ மீது வழக்கு!
தஞ்சாவூர் எஸ்.பி. கேட்பதாக கூறி தொழிலதிபரிடம் ரூ.6 கோடி கேட்டு மிரட்டிய 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப் இன்ஸ்பெக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கும்பகோணத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் சகோதரர்களான எம்ஆர் கணேஷ், எம்ஆர் சாமிநாதன் ஆகியோர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏராளமானவரிடம் சுமார் 600 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இவர்களில் கும்பகோணத்தை சேர்ந்த ரகுபிரசாத் உட்பட இருவர் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் செய்தனர். இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடைேய 2021 ஆம் ஆண்டு கணேஷ் தனது தாயாரின் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அப்போதைய காலகட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட காவல் அலுவலக தனிப்பிரிவு ஆய்வாளர் சோமசுந்தரம் தனிப்படை உதவி ஆய்வாளர் கண்ணன் இருவரும் கோயம்புத்தூரில் இருந்த எம்ஆர் கணேசிடம் ரகுபிரசாத் உள்ளிட்ட இருவர் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க ஒரு கோடி ரூபாயும், மற்ற முதலீட்டாளர்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 5 கோடி ரூபாயும் என மொத்தம் ஆறு கோடி ரூபாய் தருமாறு கேட்டுள்ளனர். இந்த தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டு அனுப்பியதாக கூறி வற்புறுத்தியுள்ளனர். மேலும், இதற்கு முன்பணமாக ரூபாய் பத்து லட்சம் தருமாறும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து கணேஷ் தனது ஊழியர் மூலமாக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நெருக்கமாக உள்ள ஒரு ஹோட்டலில் 5 லட்சம் ரூபாய் ரூபாய் மற்றும் ஏற்கனவே ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் சோமசுந்தரம் மற்றும் துணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இதையும் படிக்க:பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா நீக்கம்.. தகராறுக்கு பின்னணியில் அரசியலா?