ஆன்லைன் ரம்மியால் பறிபோன மற்றொரு உயிர்...! தடை செய்ய கோரிக்கை...!

ஆன்லைன் ரம்மியால் பறிபோன மற்றொரு உயிர்...! தடை செய்ய கோரிக்கை...!

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள நாளங்காடியின் பின்புறம் வாலிபர் ஒருவர் இறந்து கிடப்பதாக இன்று காலை திருச்சி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் இறந்தவர் மலையாண்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் மகன் சந்தோஷ்(23) என்பதும் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைப் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியானது. சந்தோஷ் கடந்த 6 மாதமாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அடிமையாகி இருப்பதும், சமீபத்தில் கூட வீட்டில் இருந்த தங்க மோதிரத்தை எடுத்துக் கொண்டு ரம்மி விளையாடியதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் விட்டை விட்டுச் சென்ற சந்தோஷ் நேற்று மாலை வரை குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தார். அதன்பின்னர் சுமார் 9.50 மணிக்கு ஒரு ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதில் “என்னுடைய மரணத்திற்கு முழுகாரணம் ஆன்லைன் ரம்மி தான். அதில் நான் அடிமையாகி அதிக பணம் இழந்துள்ளதால் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

இதனால் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து போன் செய்த போது அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இந்நிலையில் தான் இன்று காலை ரெயில்வே தண்டவாளத்தில் சந்தோஷ் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவத்தில் இறந்தவரின் உடலை ரெயில்வே போலீசார் கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.