பருத்தி விலை கடும் சரிவு....! விவசாயிகள் பருத்தி செடியுடன் ஆர்ப்பாட்டம்..!
சென்ற வருடம் ஒரு கிலோ முதல் தர பருத்தி கிலோ 120 ரூபாய்க்கும், இரண்டாம் தர பருத்தி 75 ரூபாய்க்கும் ஏலம் போனது. சென்ற வருடம் பருத்திக்கு கட்டுபடியான விலை கிடைத்ததால் ஏராளமான விவசாயிகள் இந்த வருடம் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில், கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் முதல் ரக பருத்தி கிலோ 68 ரூபாய்க்கும், 2ம் ரக பருத்தி 56 ரூபாய்க்கும் விலை போனது. மேலும், கடந்த ஆண்டு விலையுடன் ஒப்பிடும்போது இந்த வருடம் பருத்தி விலை பாதியாக குறைந்துள்ளது.
நூல் விலை குறைவு, பருத்தி ஏற்றுமதி நிறுத்தம் மற்றும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற இடங்களில் பருத்தி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது உள்ளிட்ட இதுபோன்ற காரணங்களால் பருத்தி சென்ற ஆண்டு போல அந்த அளவிற்கு விலை போகவில்லை என கூறப்படுகிறது.
இதனால், இப்பகுதியில் விளைவிக்கப்படும் பருத்தி கடும் விலை சரிவை சந்தித்துள்ளது. அதன் விளைவாக பருத்தி விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர்.
எனவே பருத்திக்கு கட்டுப்படியான விலை வேண்டியும், பருத்திக்கு கட்டுபடியான விலை கிடைக்கும் வகையில் உடனடியாக முத்தரப்பு கூட்டத்தை நடத்த வலியுறுத்தியும் நேற்று மாலை கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பருத்தி செடியினை கையில் ஏந்தி பருத்திக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய கோரி முழக்கங்கள் எழுப்பினர்.
இதையும் படிக்க | நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்கிறாா் பிரதமர் மோடி...!