இலங்கை கடற்படையினர் அட்டூழியம்... மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை...

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை, விரைவில் விடுவிப்பது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும், கொழும்பில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர் அட்டூழியம்... மீனவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை...

இலங்கை கடற்படையினரால் 19ம் தேதி கைது செய்யப்பட்ட, ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த 55 மீனவர்களை விடுவிக்க கோரி, மத்திய வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். தொலைபேசியிலும் பேசினார். அதன்பின், இரண்டு படகுகளில் மீன் பிடிக்க சென்ற, புதுக்கோட்டையை சேர்ந்த 13 மீனவர்களும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மயிலாட்டி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற அச்சமூட்டும் நிகழ்வுகள் மற்றும் தாக்குதல்கள், தொடர்ச்சியாக நடப்பதை தடுக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 68 மீனவர்கள் மற்றும் 75 மீன்பிடி படகுகளை மீட்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதினார்.

இக்கடிதத்தை, தி.மு.க., நாடாளுமன்ற குழு தலைவர் டி. ஆர்.பாலு தலைமையில், தி.மு.க., - எம்.பி.,க்கள், மத்திய அமைச்சரை சந்தித்து வழங்கினர்.  இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கைதான மீனவர்களை விரைவில் விடுவிக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக கொழும்பில் உள்ள இந்திய துாதரக அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.