விமானத்தின் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு பயணம்- 3 பேர் பலி

ஆப்கன் தலைநகர் காபூலில் விமானத்தில் இருந்து மூன்று பேர் கீழே விழும் நெஞ்சை  பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது.  

விமானத்தின் சக்கரத்தைப் பிடித்துக் கொண்டு பயணம்- 3 பேர் பலி

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், தற்போது தாலிபான்கள் ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது. இதனால் தாலிபான்களுக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள், அண்டை நாடுகளில் தஞ்சம் அடைவதற்காக காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகின்றனர். அத்துடன்  விமானத்தில் ஏற  மக்கள் ஒருவரை ஒருவர்  முண்டியடித்து  செல்லும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமெரிக்க  விமானத்தில் இருந்து மூன்று பேர் கீழே விழும் பதைபதைக்கும் காட்சி வெளியாகியுள்ளது. இவர்கள் எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என விமானத்தின் சக்கரத்தை பிடித்துக் கொண்ட பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் விமானத்தின் வேகம், காற்றின் சுழற்சி காரணமாக மூவரும், ஒருவர் பின் ஒருவராக விமானத்தில் இருந்து கீழே விழுந்து பலியாகினர். இந்த காட்சி காண்போரின் நெஞ்சை உறைய செய்துள்ளது.

மேலும், விமானம் புறப்படும் போது கதவுகள் மூடப்பட்ட நிலையிலும், ஏராளமானோர் விமானத்தை பற்றிக் கொண்டு, பின்னாலேயே ஓடிய காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது. தங்களையும் அழைத்துச் செல்லுங்கள் என்று அந்நாட்டு மக்களின் கதறல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.