கஞ்சாவுக்கு அடிமையான மகன்...தூணில் கட்டி கண்ணில் மிளகாய் பொடி தூவிய தாய்..! கதறும் சிறுவன்...

கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை அதிலிருந்து மீட்க தாய் எடுத்த அதிரடி நடவடிக்கை...

கஞ்சாவுக்கு அடிமையான மகன்...தூணில் கட்டி  கண்ணில் மிளகாய் பொடி தூவிய தாய்..! கதறும் சிறுவன்...

தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை  மாவட்டத்தில் உள்ள கொத்தாடா கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கஞ்சாவுக்கு அடிமையாகி பள்ளிக்கு செல்லாமலும்,பெற்றோர் பேச்சை கேட்காமலும் ஊர் சுற்றி வந்துள்ளான்.

இதனைக்கண்டு மனமுடைந்த அவனின் தாய் நாள் முழுவதும் கஞ்சா போதையில் இருக்கும் தன்னுடைய மகனை திருத்துவதற்கு எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளன. இதற்கிடையில் தன்னுடைய மகனை கஞ்சா போதையில் இருந்து மீட்டு அவனை திருத்த கோரி அந்த தாய் பலமுறை போலீசாரின் உதவியை நாடியுள்ளார்.

அதன்படி போலீசாரும் அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தங்கள் பாணியில் பலமுறை அறிவுரை வழங்கி அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் அந்த சிறுவன் திருந்தவில்லை. 

இந்நிலையில் தன்னுடைய மகனை எப்படி திருத்தலாம் என்று ஆலோசித்து வந்த அந்த தாய், மகனை எப்படியாவது போதையிலிருந்து மீட்டு அவனுக்கு சிறப்பான வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

அதற்காக எதையும் செய்யத் துணிந்த அந்த தாய் மகனை, வீட்டிற்கு எதிரில் உள்ள தூண் ஒன்றில் முதலில் கட்டிவைத்து, பின்னர் தன்னுடைய மகள்  உதவியுடன் சிறுவன் கண்ணில் மிளகாய் தூளை கொட்டினார்.

இதையடுத்து கண் எரிச்சல் காரணமாக அலறி துடித்த மகனிடம் இனிமேல் நான் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடு என்று தாய் கேட்டுள்ளார். ஆனால் அந்த சிறுவன் கஞ்சாவை விட்டுவிடுகிறேன் என்று கூற தயங்கியுள்ளான். இதனால் விரக்தியடைந்த அந்த தாய் மகனின் முகத்தில் மேலும் மிளகாய் பொடியை பூசி தண்டனையை கடுமையாக்கியுள்ளார்.

காரம் மற்றும் எரிச்சலை தாங்க முடியாத அந்த சிறுவன் இனிமேல் கஞ்சா பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளான்.
இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ள நிலையில் சூரியாபேட்டை போலீசார் விரைந்து சென்று தாய், மகன் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.