நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்

நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என என மக்களவையில், மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
அடுத்த முறை, சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் சார்பில் மக்களவையில் கோரிக்கை வைக்கப்பட்டது.  அதற்குப் பதில் அளித்துப் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தக் கூடாது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்று விளக்கம் அளித்தார்.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு, மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப மக்களவையிலும், சட்டமன்றங்களிலும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று அரசியலமைப்பு சட்டப் பிரிவுகளில் இருப்பதாகக் குறிப்பிட்டார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் என்ற பிரிவு, அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ளதால், அவர்களுக்கு மட்டுமே சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்றும் தெரிவித்தார்.
2019ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாகவும், ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்த முடியாமல் போய் விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.