நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் இடையே மோதல் ...4 படகுகளுக்கு தீ வைப்பு...!
விசாகப்பட்டினம் அருகே கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு மீன்பிடி படகுகளுக்கு ஒரு தரப்பினர் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கடற்பகுதியில் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்தப்படும் வலைகள் தொடர்பாக மீனவர்களுக்கு இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சினைகள் நிலவி வந்தன. இந்நிலையில் மீனவர்களின் ஒரு தரப்பினர் மீன் பிடிப்பதற்காக பயன்படுத்திய வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று மற்றொரு தரப்பினர் இன்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே இன்று கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் பயன்படுத்திய 4 மீன்பிடி படகுகளுக்கு தீவைத்தனர். இதனை அறிந்த கடலோர காவல்படையினர் ஹெலிகாப்டர்களை அனுப்பி தீ வைக்கப்பட்ட படகுகளில் இருந்த மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர். இதுதொடர்பாக விசாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் மீனவர்கள் இடையே நடைபெற்ற மோதல் எந்த நேரமும் பெரும் பிரச்சனையாக வெடிக்கலாம் என்பதால் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.