கன்னட திரையுலகில் மீண்டும் போதை பொருள் புழக்கம்- நடிகை உள்பட 3 பேரின் வீட்டில் போலீசார் சோதனை

பெங்களூரு கோவிந்தபுராவில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதாக கூறி, நடிகை சோனியா அகர்வால் உள்பட 3 பேரின் வீடுகளில் போலீசார் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கன்னட திரையுலகில் மீண்டும் போதை பொருள் புழக்கம்- நடிகை உள்பட 3 பேரின் வீட்டில் போலீசார் சோதனை

பெங்களூரு கோவிந்த்புராவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக பலரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா  மற்றும் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவை அனைத்து பெங்களூருவில் உள்ள சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் தொழில் அதிபர்கள், இசையமைப்பாளர்கள் என பலர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிக்கு சப்ளை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பதாக தெரியவந்தது. இது தொடர்பாக சிறையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் மன்னன் தாமஸ்  கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கன்னட நடிகையும், மாடல் அழகியுமான சோனியா அகர்வால், மற்றும் தொழில் அதிபர் பரத், டி.ஜே வச்சன் சென்னப்பா ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.


இவர்கள் தாங்கள் கலந்து கொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு போதை பொருட்களை சப்ளை செய்துள்ளனர். இதை உறுதி செய்த பெங்களூரு போலீசார் இன்று பெங்களூரு ராஜாஜிநகர் பத்மநாப நகர் பென்சன் டவுன் பகுதியில் உள்ள சோனியா, பரத், வச்சன் சென்னப்பா ஆகியோரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பல மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதில் தொழில் அதிபர் பரத் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர்களை தொடர்ந்து நடிகை மற்றும் டி.ஜே இருவரையும் விசாரணைக்கு ஆஜராக காவல்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இருவரும் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த போதை பொருள் வழக்கில்தான் நடிகை ராகிணி, சஞ்சனா சிக்கினர் . தற்போது மற்றொரு நடிகை சிக்கியிருப்பது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.