வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் நீக்கம் செய்யும் சிறப்பு முகாம் இன்று தொடக்கம்!

வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தகுதி பெறும் நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளராக தங்களுடைய பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம். இதற்கான வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி கடந்த அக்டோபர் 27-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த பணி டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையும் படிக்க : வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கொட்டி தீர்த்த கனமழை...!

வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதியில் 18 வயது பூர்த்தியாக உள்ளவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் பெயர் நீக்கமும் செய்து கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் இன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, திருத்தங்களை மேற்கொள்ள இணைய சேவைகளின் மூலம் தகுந்த ஆவணங்களை பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

இந்த முகாம் வரும் 5, 18, 19 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்கும் விண்ணப்பங்களை பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம், முகவரி மாற்றம் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணிகள் டிசம்பா் 9-ம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் 2024 ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்படும்.