தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா? - இன்று முக்கிய ஆலோசனை

தமிழகத்தில் 12ம் வகுப்பு  பொதுத்தேர்வு நடைபெறுமா? -  இன்று முக்கிய ஆலோசனை

   சிபிஎஸ் இ 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளா நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தீவிர  தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடும் பணிகள் ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் 12 ஆம்  வகுப்பு சிபிஎஸ் இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுமா அல்லது ரத்து  செய்யப்படுமா என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது சிபிஎஸ் இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.  


சி.பி.எஸ். இ. அறிவிப்புக்குப் பிறகு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள்  குறித்து முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.