கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி ட்வீட்

கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் - டிடிவி ட்வீட்

உலகம் முழுவதும் கொரோனா பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இதனைத்தொடர்ந்து கருப்பு பூஞ்சை என்ற நோயும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவில் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை, கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கொரோனாவைத்  தொடர்ந்து  கருப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அளவு மருந்தினை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்நோயினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையை  வைத்து பார்க்கும்போது,  கையிருப்பில் உள்ள மருந்து போதுமானதாக இல்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது.  எனவே, கருப்பு பூஞ்சை நோயினைக்  கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டியது அவசியம்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து கருப்பு பூஞ்சையைக்  கண்டறிதல், அதனால் பாதிக்கப்பட்டோருக்கு தாமதமின்றி சிகிச்சை அளித்தல்  ஆகியவற்றுக்கு மாவட்டம்தோறும் தனி ஏற்பாடுகளை செய்திட வேண்டும் மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கு அரசு கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றிய பெண் ஒருவரே  முதல் பலியாகி இருப்பதால், அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களையும் கொரோனா தடுப்பு  முன்களப்  பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.

இது மட்டுமின்றி, கொரோனாவால் உயிரிழந்த முன்களப்  பணியாளர்களுக்கு  வழங்கப்படும் இழப்பீடுகளை, கொரோனாவின் தொடர்ச்சியாக வரும் கருப்பு பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும்  தமிழக அரசு வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.