தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம்.. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!!

தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது.  தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில்  26-வது மெகா தடுப்பூசி முகாம்.. மாநிலம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் ஏற்பாடு!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு வயது பிரிவினருக்கும் தனித்தனியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

18 முதல் 60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு பல்வேறு கட்டமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர்.  இதுவரையில் 10 கோடியே 6 லட்சத்து 29 ஆயிரத்து 631 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 18 முதல் 44 வயதுள்ள பிரிவுகளில் 5 கோடியே 10 லட்சத்து 31 ஆயிரத்து 421 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இன்னும் 2 தவணை தடுப்பூசி போடாமல் ஒரு கோடியே 25 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர். முதல் தவணை தடுப்பூசி போடாமல் 50 லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டாமல் இருப்பது சுகாதாரத்துறையை கவலை அடைய செய்துள்ளது.  சென்னையில் முதல் தவணை 98 சதவீதமும், 2-வது தவணை 87 சதவீதமும் போடப்பட்டுள்ளது.

இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களும், 2-வது தடுப்பூசி போடும் தகுதி வாய்ந்தவர்களும் உடனே செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் 26-வது மெகா தடுப்பூசி முகாம் இன்று 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் ஆயிரத்து 600 மையங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. மாநிலம் முழுவதும ஒரு லட்சத்திற்கும் மேலான சுகாதார பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர். தகுதி உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு நோய் தொற்றில் இருந்து இனி வரும் காலங்களில் பாதுகாத்து கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.