பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது...! சைதை சாதிக் கண்டித்து அனுமதியின்றி போராட்டம்..!

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கைது...! சைதை சாதிக் கண்டித்து அனுமதியின்றி போராட்டம்..!

பா.ஜ.க பெண் நிர்வாகிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக குற்றஞ்சாட்டி தி.மு.க நிர்வாகியான சைதை சாதிக் மீது பா.ஜ.க மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தென் சென்னை திமுக வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக், கடந்த 26 ஆம் தேதி ஆர்.கே நகரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பா.ஜ.க பெண் நிர்வாகிகளான குஷ்பு, நமீதா, கௌதமி, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசிய வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் கடந்த 29 ஆம் தேதி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் பா.ஜ.க மகளிர் அணி பொதுச் செயலாளர் நதியா தலைமையில் வந்த பெண் நிர்வாகிகள் தங்கள் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அவதூறாகப் பேசிய தி.மு.க நிர்வாகி சைதை சாதிக் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்திருந்தனர். 

இந்த புகார் தொடர்பான விசாரணை சைபர் கிரைம் பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பா.ஜ.க பெண் நிர்வாகிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் தி.மு.க வர்த்தக அணி நிர்வாகியான சைதை சாதிக் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் பற்றி தரக்குறைவாகப் பேசுதல், பெண்களின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் பிரிவு போலீசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பா.ஜ.க பெண் நிர்வாகிகளை அவதூறாகப் பேசிய சைதை சாதிக்கை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில், போராட்டம் நடைபெற்றது. கனமழைக்கு இடையில் நடைபெற்ற இந்த போராட்ட்டத்தில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில் இந்த போராட்டமானது, அனுமதியின்றி நடத்தப்பட்டதாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினரை  போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிக்க : ”மொத்த வர்த்தகம் 14,100 கோடிகள் ஆகும்....”வெளியுறவுத் துறை அமைச்சர்!!!