பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுகிறது : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுவதாக எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.

பொங்கலுக்கு பணம் கொடுக்காமல் திமுக ஏமாற்றுகிறது : எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பணம் வழங்குவது குறித்து திமுக அறிவிக்காதது மக்களின் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தொடங்கிய நிலையில், அதிமுக வெளிநடப்பு செய்தது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு மழையால் பாதிக்கப்பட்ட சென்னை வாழ் மக்களுக்கு எந்த நிவாரணத் தொகையும் வழங்கவில்லை என்றும், காவல்துறை திமுகவின் கைப்பாவையாக  செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 

பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அதிமுக அரசு ரொக்கப்பணம் வழங்கியதாகவும், ஆனால், இந்தமுறை மக்களுக்கு பணம் அளிக்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். திமுக அரசு காழ்புணர்ச்சியோடு அம்மா மினி கிளினிக்குகளை  மூடியுள்ளதாகவும், தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம், கட்டப்பஞ்சாயத்து மீண்டும் தலைதூக்கியுள்ளதாகவும் பேசியுள்ளார். மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு எனவும் குறிப்பிட்டார்.