"எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடக் கூடிய அரசு தான் திமுக" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய அரசு தான் திமுக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் போராடக் கூடிய அரசு தான் திமுக" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 30  ஆயிரத்து 423 பயனாளிகளுக்கு 360 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து, வேலூரில் 32 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பில் 50 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், 62 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 17 முடிவுற்ற திட்டங்களையும் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

பின்னர் மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதி உரிமை, சமூக உரிமை, காவிரி உரிமை மற்றும் கல்வி உரிமை வேண்டும் என்று திமுக அரசு குரல் கொடுப்பது மத்திய அரசுக்கு எதிரான குரல் அல்ல தமிழக மக்களுக்கு ஆதரவான குரல்கள்தான் என தெரிவித்தார்.

வேலூர் பயணத்தை தொடர்ந்து, ராணிப்பேட்டைக்கு வருகை தந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று திறந்து வைக்கிறார். பின்னர் நடைபெறும் அரசு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதலமைச்சரின் வருகையையொட்டி, ராணிப்பேட்டையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.