"ஆளுநர் பதவி காலாவதியானது" கனிமொழி  பேச்சு

"ஆளுநர் பதவி காலாவதியானது" கனிமொழி  பேச்சு

ஆளுநர் போன்ற காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். 

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்து புள்ளம்பாடி ஒன்றியம் கோவண்டாக்குறிச்சி ஊராட்சியில், பேனியன் பால்ம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு வள மையத்தை திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றியனர்.

இந்த மனநல பயிற்சி மையமானது மன நோயிலிருந்து மீண்டவர்கள் தலைமையிலான "மீண்டும் இல்லம்" என்ற அடிப்படையில் துவங்கி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் மக்களிடையே நல்வாழ்வை ஊக்குவித்தல், உளவியல் மற்றும் சமூக துயரத்தை தடுத்தல், மனநோயை கண்டறிதல், புனர்வாழ்வு உள்ளிட்ட பராமரிப்பு ஆதரவுக்கான பரிந்துரைகள் வழங்குதல் மற்றும் சமூக மன நல மேம்பாட்டு மற்றும் ஆலோசனைக்காக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து பணி செய்தல் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்பின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், மீண்டும் இல்லம் என்ற திட்டத்தினை  அடுத்த கட்டத்திற்கு திராவிட முன்னேற்ற அரசு எடுத்துச் செல்லும் என தெரிவித்தார். 

மேலும், திராவிட மாடல் காலாவதி ஆகிவிட்டதாக தமிழக ஆளுநர் கூறிவருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய  கேள்விக்கு பதிலளித்த அவர், "காலாவதியான பதவியில்  இருப்பவர்கள் பேசுவதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்" எனக் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக முதன்மை செயலாளரும்,நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஸ் அகமது, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜீத் குமார், பேனியன் பால்ம் நிறுவனர் வந்தனா, பேனியன் பால்ம் இயக்குநர் கிஷோர் குமார், துணை இயக்குநர் இரமேஷ், சோலையில் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் பிரதீப் சோலையில், சங்கீதா ராஜேஷ், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க:"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??