தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்,.. ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடக்கம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில்,..  ஜிப்சம் கழிவுகள் அகற்றும் பணிகள் தொடக்கம்..!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ள பல்வேறு இடங்களை துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தூத்துக்குடியில்  செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் எனும் காப்பர் உற்பத்தி செய்யும் ஆலையால் சுகாதார  சீர்கேடு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி மக்கள் அந்த ஆலையை மூடக்கூறி கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.  நீண்ட நாள் போராட்டமாக இது உருவெடுத்த நிலையில், போராட்டக்காரர்கள்  மீது  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  அதன் விளைவாக, 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.  பின்னர், நீண்ட போராட்டத்துக்கு பிறகு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

அதன் பிறகும், ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது என எதிர்ப்பாளர்கள் ஒரு புறமும், ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கவேண்டும் என ஆதரவாளர்கள் ஒரு புறமும் ஆலை தொடர்பாக தொடர்ந்து வழக்குகள் மேற்கொண்டும் உள்ளனர்.  பின்னர், ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் ஆலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி ஆலையை திறக்க அனுமதி வேண்டி முறையிட்டனர்.  அதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது.  

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு, 
ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளது.

தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை தமிழ்நாடு அரசு அகற்ற முடிவு செய்துள்ளது. பணிகளை மேற்கொள்ள துணை ஆட்சியர்  தலைமையில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழுவின் தலைவர் துணை ஆட்சியர் கெளரவ் குமார் தலைமையில், தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர் சரவணன், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஹேமந்த் ஜோசன், தீயணைப்புத்துறை அதிகாரி ராஜ், தூத்துக்குடி நகராட்சி செயற் பொறியாளர் ரங்கநாதன், ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,  நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி விஸ்வநாதன் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி சரவணன் ஆகியோர் இன்று ஆலையினுள் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி மற்றும் பல்வேறு இடங்களை ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க    | சஜித் மிர் விவகாரம்; சீனாவுக்கு இந்தியா கண்டனம்!